ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி தலையில் மின்விசிறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் சோமண்டிப்பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது அறையில் இருந்த மின்விசிறி திடீரென கழன்று அங்கிருந்த மாணவி விழுந்தது. இதனால் காயமடைந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்,
மேலும் அவருக்கு ஆபத்தான நிலை இல்லையென அரசு மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதன் பின் மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து பள்ளிகளில் இருக்கும் மின்விசிறிகளையும் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புகளும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் கர்னுல் கோனேகண்ட்லா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையிலிருந்த மின்விசிறி விழுந்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.